அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 10 July 2023

அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்.


தென் மாவட்டங்களில், திருநெல்வேலி சந்திப்பு நிலையம் தான் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு முக்கிய ரயில் நிலையம் ஆகும், இங்கு நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், செந்தூர் உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாநிலத்தின் தலைநகர் வரை தினசரி வந்து செல்லக்கூடிய ரயில்களாகும். மேலும் சரக்கு கையாள்வதிலும் பொதுமக்களுக்கு ரயில் சேவை அளிப்பதிலும் திருநெல்வேலி சந்திப்பு நிலையம் முக்கிய பங்காற்றி வருகின்ற நிலையில், ஏராளமான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். 

முக்கிய வழிபாட்டு தலங்களான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், தென்காசி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து தான் ரயில் சேவை அடிக்கடி உள்ளது. 5 நடைமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், தனியே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு சுமைகளை எடுத்து செல்பவர்கள் இந்த சந்திப்பு ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதென்றால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஏனெனில் நடைமேடைகளுக்கு இடையே உள்ள இயந்திர படிக்கட்டுகள், அதாவது மின் தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள், பல மாதங்களாக பராமரிக்கப்படாமலும் வேலை செய்யாமலும் உள்ளது. 


இதனால் அனைத்து தர மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மேலும் மின்கலம் மூலம் அதாவது பேட்டரி மூலம் இயங்கும் நான்கு சக்கர வாகனம் ஒன்று ஒரு வருடத்திற்கு முன்பு இயங்கியது, தற்போது அது செயல்பாட்டில் இல்லை இத்தகைய குறைபாடுகளை குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்ட பொழுது அவர்கள் எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மாறாக பழுது பார்க்க ஆட்கள் இல்லை என்ற பதில் பலரிடத்தில் உள்ளது. மேற்படி அவலங்களை மதுரை வணிக மேலாளர் மற்றும் மின்னியல் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் 27.06.2023 அன்று தகவல் தெரிவித்த போது அவர்கள் இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து விதமான வேலைகளும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி கூறினர், இருப்பினும் இரு வாரங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை. 


இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இருக்கின்ற சேவை குறைபாடுகளையே சரி செய்ய முடியாத போது, புதிய ரயில் சேவை தேவை தானா என்ற கேள்விக்குறியுடன், மேற்படி குறைபாடுகளை யார் சரி செய்வது யாரிடம் முறையிடுவது என திருநெல்வேலியில் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad